×

மனைவியை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்; மீன்கடை ஊழியர் படுகொலை; நண்பன் உள்பட 2 பேர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பாண்டியன் (45). பம்மல், நாகல்கேணியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். அதே மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருபவர் சிரஞ்சீவி (26). இருவரும் நண்பர்கள். வழக்கமாக வேலை முடிந்ததும் இரவு நேரத்தில் இவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அதன்படி, கடந்த 10ம் தேதி இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் பாண்டியனின் மனைவியை சீரஞ்சீவி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்து இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். இருப்பினும் பாண்டியனுக்கு ஆத்திரம் தீரவில்லை. இதனால், நேற்று முன்தினம் சிரஞ்சீவி வீட்டுக்கு பாண்டியன் சென்றுள்ளார். அங்கு, அவர் இல்லை. அவரது மனைவி பவானி மட்டும் இருந்துள்ளார். அவரை, ஆபாசமாக திட்டிவிட்டு பாண்டியன் சென்று விட்டார். இந்த விவகாரம் சிரஞ்சீவிக்கு தெரியவந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஹரி என்பவரை அழைத்துக்கொண்டு பாண்டியனை தேடி பைக்கில் பொழிச்சலூர் விநாயகபுரத்துக்கு சென்றனர். அங்கு, வீட்டில் இருந்த பாண்டியனை வெளியே அழைத்து வந்து, தட்டிக் கேட்டுள்ளார்.

இதில், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாண்டியனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு, குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிரஞ்சீவி, ஹரி ஆகியோரை கைது செய்தனர்.


Tags : shop worker , Anger because of speaking obscenely to his wife; Fish shop worker massacre; 2 people including friend were arrested
× RELATED மனைவியை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்;...